என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை, என்னை கொல்ல முற்பட்ட பிரபாகரனின் மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது : அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை, என்னை கொல்ல முற்பட்ட பிரபாகரனின் மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது : அமைச்சர் டக்ளஸ்

என்னை கொல்ல பல தடவை முற்பட்ட பிரபாகரனையே பழிவாங்கவில்லை. மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அழிவுகள், இழப்புக்கள், இடம்பெயர்வுகள் எமக்கு வந்திருக்காது. மேலும் பல மடங்கு முன்னேற்றகரமான வாழ்க்கையில் நாங்கள் இருந்திருப்போம்.​கெடுகுடி சொற்கேளாது என்பது போல அது அப்படியே போய்விட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கூட சந்திரகுமார் எம்மோடு சேர்ந்து கேட்டிருந்தால் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவருடன் சேர்ந்து கேட்டால் இங்கு வாக்கு விழாது என யாரோ கூறியிருந்த நிலையில் அவர் அதற்கு எடுபட்டு போய்விட்டார். அது அவருடைய விதி. அந்த விதியை மதியால் வெல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அவருக்கு அது முடியாமல் போய்விட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் தொழிலோடு சம்பந்தப்பட்டது மாத்திரமல்லாது, சமுர்த்தி உள்ளடங்கிய சகல வேலைகளையும் மேற்பார்வை செய்யவும், அதனை கண்காணிக்கவும் வழிநடத்தவும் விரும்புகின்றேன். அது எனக்குரிய சட்ட கடமைகளாகவும் இருக்கலாம். எனக்குரிய அரசியல் கடமைகளாகவும் இருக்கலாம்.

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை.

நான் உங்களிடம் எதிர்பார்ப்பது சட்ட கடமைகள், மக்கள் கடமைகளை மாத்திரமே.இந்த பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக மாத்திரமல்ல, ஏனைய அமைச்சர்களுடைய வேலைத்திட்டங்களுடன் சேர்த்து நான் அதை மேற்கொள்ள விரும்புகின்றேன்.

பரந்தன் குறூப் நிருபர்

No comments:

Post a Comment