தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆபிரிக்க சிங்கக் குட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்துள்ளன.
பிறந்து எட்டு நாட்கள் ஆகும் ஆண் மற்றும் பெண் வெள்ளை சிங்கக் குட்டிகள் அண்டலூசியா பகுதியில் உள்ள மலைக் கிராமமான ஜிமெனா டி லா புரோன்டெராவில் அவற்றிற்கு உணவளிப்பதற்காக சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டன.
இந்த சிங்கக் குட்டிகளின் பெற்றோர்கள் சாதாரண ஆபிரிக்க சிங்கங்கள் ஆகும். எனவே அவைகளிடம் இருந்து வெள்ளை சிங்கங்கள் பிறந்துள்ளது விலங்கியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகளாவிய வெள்ளை சிங்கங்கள் பாதுகாப்பு அறக்கட்டளை, இந்த விலங்குகள் அல்பினோக்கள் இல்லை என்றும் இவை தென்னாப்பிரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில் உள்ள கிரேட்டர் திம்பாவதி பகுதியின் அரிய மரபணு என கூறியுள்ளது.
1930 களில் வெள்ளை சிங்கங்கள் இனப் பெருக்கத்திற்காகவும் வேட்டைக்காகவும் காடுகளில் இருந்து அகற்றப்பட்டு சிறை பிடிக்கப்பட்டன. தற்போது 13 க்கும் குறைவான வெள்ளை சிங்கங்களே அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வாழ்கின்றன என கூறப்படுகிறது.
இதற்கு காரணம் அவை தற்போதைய அறிவியலால் வேறுபட்டவை என அங்கீகரிக்கப்படாததால் சட்டத்தால் பாதுகாக்கப்படவில்லை என்பதே ஆகும். வெள்ளை சிங்கங்கள் பாந்தெரா லியோ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment