விவசாயிகளுக்கு இந்தளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு எனது அரசாங்கத்தின் கீழ் இடமளிக்க மாட்டேன். விவசாயிகளின் உரப் பிரச்சினை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் விவசாயத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள போதிலும், அதற்கு சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை. அரசாங்கம் அவற்றை செவிமெடுப்பதுமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பகமூன பிரதேசத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசினாலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதில்லை. விவசாயத்துறை அமைச்சர் வயலில் உள்ள வரம்புகளில் கூட செல்லத் தெரியாதவராவார்.
விவசாயிகளின் உரப் பிரச்சினை தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் விவசாயத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். எனினும் சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.
சில இராஜாங்க அமைச்சர்கள் என்மீது குற்றம் சுமத்துகின்றனர். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளால் என்னால் பொலன்னறுவை மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளது என்று கூறினேன். இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இராஜாங்க அமைச்சர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். எனினும் அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை.
நான் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டேன். சேதன உரத்தினைப் பயன்படுத்தி விவசாயத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளை பழக்கப்படுத்த வேண்டும்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் நூறு வீதம் சேதன உரம் பயன்படுத்தப்படுவதில்லை. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட பெரும்போகங்கள் 50 சதவீதம் இரசாயன உரத்தின் மூலமே இடம்பெறுகின்றன.
1980 ஆம் ஆண்டுகளிலிருந்து நான் விவசாயிகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். விவசாயிகள் விஷம் அருந்தி இறக்க முடிவு செய்த போது, அவர்களுக்காக பொலன்னறுவை மாவட்டத்தில் முதன் முறையாக சவப்பெட்டிகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment