அரசாங்கம் தற்போது முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமல்ல தமிழ் சமூகத்தையும் அவமதித்திருக்கின்றது. அதாவது ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த எவரும் நியமிக்கப்படவில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (2) மாலை ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கையாகும்.
அத்துடன் இந்த செயலாணியின் தலைவரான ஞானசார தேரர் நீதிமன்றத்தினால் குற்றம் சுமத்தப்பட்டவர், அதேபோன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டு பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டில் இன முரண்பாடுகளை தூண்ட காரணமாக இருந்தவர்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்துக்கு பதிலாக முரண்பாடுகளே அதிகரிக்கும்.
எனவே ஜனாதிபதியின் அறியாமையாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனால் ஜனாதிபதியின் அறியாமையை போக்க தீபாவளி நிகழ்வின் வெளிச்சம் உதவ வேண்டும் என பிராத்திப்போம் என்றார்.
No comments:
Post a Comment