(இராஜதுரை ஹஷான்)
க்ளைபோசெட் உள்ளிட்ட 5 கிருமிநாசினிகள் மீதான தடை நீக்கம் தொடர்பிலான வர்த்தமானி பீடைக்கொல்லி தொழினுட்ப குழு மற்றும் ஆலோசனை சபையினதும், அமைச்சரவையினதும் ஆலோசனைக்கு அமைய வெளியிடப்பட்டது. இவ்விடயத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறவில்லை. ஆகவே தான் பதவி விலகப் போவதில்லை என பீடைக்கொல்லி பதிவாளர் கலாநிதி ஜே.ஏ. சுமித் தெரிவித்துள்ளார்.
க்ளைபோசெட் உள்ளிட்ட 5 பீடைக்கொல்லிகள் பாவனை மற்றும் வியாபாரம் மீது 2014 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் பீடைக்கொல்லிகள் பதிவாளர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
பீடைக்கொல்லி பதிவாளர் வெளியிட்ட வர்த்தமானி அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானது. ஆகவே அந்த வர்த்தமானி வலுவற்றதுடன் அவரை பதவி நீக்கி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
க்ளைபோசெட் உள்ளிட்ட பீடைகொல்லிகள் இறப்பர் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைகளுக்கு பாவிப்பது தடை செய்யப்பட்டது. அத்தடை 2018 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கிகாரத்துடன் நீக்கப்பட்டது.
க்ளைபோசெட் உள்ளிட்ட 5 பீடைக்கொல்லிகள் மீதான தடை நீக்கத்திற்கான தீர்மானம் பீடைக்கொல்லி தொழினுட்ப குழு மற்றும் ஆலோசனை சபை,கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது அதன் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது இதனை சட்டவிரோத செயற்பாடு என குறிப்பிட முடியாது.
பீடைக்கொல்லி பதிவாளர் பதவியில் இருந்து விலக முடியாது அமைச்சரது தீர்மானத்திற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என பதிவாளர் ஜே.ஏ சுமித் குறிப்பிடுள்ளார்.
No comments:
Post a Comment