ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆயுட்கால தலைவர் கிடையாது. கீழ் மட்டம் முதல் செயற்குழு வரை அனைவரின் அனுமதியுடனே கட்சி தலைமை தெரிவு செய்யப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
பெரும்பான்மை பலத்துடன் யாருக்கும் தலைசாய்க்காது ஆட்சியமைக்க மக்கள் ஆணையை கோர இருக்கிறோமென்றும் அவர் குறிப்பிட்டார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்த அவர், நல்லாட்சி அரசில் நாம் வாக்களித்த பல விடயங்களை செய்ய முடியாமல் போனதை ஏற்றுக் கொள்கிறோம். ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணியில் இருந்தவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்.
எதிர்காலத்தில் எமது கட்சி அவ்வாறு ஒரு நிலை ஏற்பட இடமளிக்காது.சஜித் பிரேமதாசவே எமது ஜனாதிபதி வேட்பாளர் . கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய மாட்டோம். எமது கட்சி யாப்பின் பிரகாரம் ஆயுட்கால கட்சி தலைமை கிடையாது.
மக்கள் ஆணைக்கு மாற்றமாக வேறு நபர்களை ஆட்சிக்குள் கொண்டு வந்ததே நல்லாட்சி அரசு பின்னடைவதற்கு காரணம்.அதனை அன்றிருந்த இரு தலைவர்களும் தான் ஏற்க வேண்டும்.
எமது தரப்பில் குறைபாடுள்ளது. கட்சி தலைமையை தெரிவு செய்வதற்கு செயற்குழு மற்றும் மத்திய குழுவின் அனுமதி தேவை. வருடாந்தம் கட்சி மாநாட்டில் அனுமதி பெற வேண்டும்.கட்சி தொகுதி ஆதரவாளர்களின் ஆதரவுடனே தலைவர் தெரிவாக வேண்டும். இவை எமது கட்சி யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எவருக்கும் தலைசாய்க்காது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க மக்கள் ஆணையை கோர இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment