"தடுப்பூசி செலுத்திக் கொள்வோம், இல்லை இறந்து போவோம்" : ஜேர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

"தடுப்பூசி செலுத்திக் கொள்வோம், இல்லை இறந்து போவோம்" : ஜேர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ்: "தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லையெனில் இறந்து போவோம்" ஜேர்மனி சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

"இந்த குளிர்காலத்துக்குள் ஜேர்மனியில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள், நோயிலிருந்து மீட்கப்படுவார்கள் அல்லது இறந்து போவார்கள்" என திங்கட்கிழமையன்று பெர்லினில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.

ஜேர்மனி கொரோனா வைரஸின் நான்காவது அலையில் சிக்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் பல மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

மேற்கு ஐரோப்பாவில் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அந்நாட்டில் 68 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து ஜேர்மனியின் தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. தற்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா அலை மோசமானதாக இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 30,643 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன் இருந்ததை விட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். எண்ணிக்கை 7,000 அதிகரித்துள்ளது. இது உலகிலேயே கொரோனா பரவல் விகிதத்தில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. அதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் சில இடங்களில் இருந்து விலக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஜேர்மனியின் புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் அனுமதி ரத்தும் அடக்கம்.

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாகச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கருத்துக்கு தான் எதிரானவன் என்றும், ஆனால் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது மற்றவர்களை பாதிக்கிறது என்றும் கூறினார் ஸ்பான்.

"சுதந்திரம் என்பது பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய கடமை சமூகத்துக்கு இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

அதிதீவிரமாக பரவக் கூடிய கொரோனாவின் டெல்டா திரிபுதான் சமீபத்திய கொரோனா அலையை முன்னெடுத்து வருகிறது. எனவே "தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அடுத்த சில மாதங்களில், நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று கூறினார் அமைச்சர் ஸ்பான்.

திங்கட்கிழமையன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசியை புகழ்ந்து பேசினார். அது தடுப்பூசிகளின் ரோல்ஸ் ராய்ஸ் என்று கூறினார். ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகளுக்கான அதிக தேவை காரணமாக கையிருப்பு குறையும் அபாயம் உள்ளது.

அடுத்த சில மாதங்களில் கையிருப்பில் உள்ள சுமார் 16 மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகளை பயபடுத்தவில்லை எனில் காலாவதியாகி விடும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த வார இறுதிக்குள் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கும் என ஜேர்மனி எதிர்பார்க்கிறது.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ஜேர்மனியில் 99,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 54 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment