அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : வரவு செலவுத் திட்டம் வேதனையில் துன்புறும் மக்களுக்கு உலக்கையால் அடித்தது போல் உள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : வரவு செலவுத் திட்டம் வேதனையில் துன்புறும் மக்களுக்கு உலக்கையால் அடித்தது போல் உள்ளது

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்தல், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை வெள்ளிக்கிழமை (12 ) நடத்தியது.

மக்களின் கண்ணீர் வடிப்பதை அறியாத மோசமான இந்த அராசங்கத்தை இல்லாதொழித்து மக்களின் துயர் துடைக்கும், சர்வதேச ரீதியில் நல்லுறவை பேணும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மலர வேண்டுமென்றும் இதில் கலந்துகொண்ட ஐ.தே.க. ஆதரவாளர்கள் கோஷப் எழுப்பியும், பதாகைகளைத் தாங்கியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், எமது நாட்டு விவசாயிகளுக்கு உரம் இல்லை, பட்டினிச் சாவில் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அரிசியின் விலையை நிர்ணயிப்பது டட்லி சிறிசேனவா? அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்காதே, குறைந்து செல்லும் டொலர் கையிருப்பு, கெரவலப்பிட்டி மின் நிலைய பங்குகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் தாங்கிய பாதாகைகளை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் ஆரம்பமாகி லிப்டன் சுற்றுவரை வந்த இந்த இந்த ஆர்ப்பாட்ட ‍ பேரணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் உறுப்பினர்களான நவீன் திசாநாயக்க, சாகல ரத்நாயக்க , கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, "ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினரான ஏழு அறிவுடையக் கொண்ட பஷில் ராஜபக்சவின் வரவு செலவுத் திட்டம் இன்று வாசிக்கப்பட்டது.

இந்த வரவு செலவுத் திட்டமானது வேதனையில் துன்புறும் மக்களுக்கு உலக்கையால் அடித்தது போல் உள்ளது. ஒரு சில மணித்தியாலங்களுக்குக் கூற நிற்க முடியாத ஒருவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நான் கேட்கிறேன். இந்த வரவு செலவுத் திட்டத்தால் துன்புறும் மக்கள் மென்பேலும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

விவசாயத்தை செய்வதற்கு முறையான திட்டமில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பு திட்டமில்லை, சுகாதாரத் துறையை மேம்படுத்த தெரியவில்லை, அரச ஊழியர்களை பலப்படுத்த திட்டமில்லை, வியாபாரத்தை கட்டியெழுப்ப திட்டமில்லை, வர்த்தகர்களை பாதுகாக்க திட்டமில்லை. இவற்றுக்கு முறையான செயற்திட்டங்கள் எதுவும் இல்லாமல் மணிக்கணக்கான மக்களின் நேரத்தை வீணாக செலவழித்த ஓர் வரவு செலவுத் திட்டமாகவே பார்க்கிறோம்.

ஆகவே, ராஜபக்ச குடும்பத்துக்கு இந்த நாட்டை கொண்டு ‍செல்வதற்கு முடியாமல் போயுள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும்.

2001 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் வீழ்ந்து கிடந்த இந்த நாட்டை நாம் முன்னேற்றியிருந்தோம். 2001 இல் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பினோம். 2015 இல் அரசியல் ரீதியாக வீழ்ந்திருந்த நாட்டை கட்டி எழுப்பினோம். ஆகவே, நாட்டை கட்டி எழுப்பக்கூடிய கட்சிக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பஷில் ராஜபக்ச வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறினர். ஆம், பஷிலுக்கும் அவரது குடும்பத்துக்கும் எல்லா நன்றாக அமைந்துவிட்டது. ஆனால், நாட்டு மக்களுக்கு பட்டினி சாவில் இறக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மக்கள் மேலும் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment