கொவிட் தொற்றுக்கு பின்னர் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டால் பாரிய ஆபத்து : விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

கொவிட் தொற்றுக்கு பின்னர் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டால் பாரிய ஆபத்து : விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்குள்ளாகி 28 நாட்களின் பின்னர் 'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' ஏற்படுவதால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படக் கூடும். இவற்றில் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டால் மாரடைப்பை போன்ற நோய் நிலைமை ஏற்படக் கூடும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்றுக்குள்ளாகி 28 நாட்களின் பின்னர் 'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' ஏற்படுதல் அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படும் பலர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளுக்கு வந்து மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர்.

'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' எனும் போது தொற்றின் போது காணப்பட்ட அறிகுறிகள், வேறு நோய் அறிகுறிகள் மற்றும் புதிய நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவை தவிர சிகிச்சையின் போது எடுத்துக் கொண்ட மருந்துகளாலும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' ஏற்படும் போது அதிக உடற்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் வலி என்பன ஏற்படும். இதேவேளை சுவாசிப்பதில் சிரமமும் ஏற்படும். இவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளின் ஊடாக தீர்க்கக் கூடியவையாகும்.

எவ்வாறிருப்பினும் குருதி உறைதல் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும். குருதி உறைதல் ஏற்பட்டால் இதயத்தின் இரத்தக் குழாய்களில் கட்டிகளைப் போன்ற நிலைமை தோற்றம் பெற்று மாரடைப்பை போன்ற நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது ஆபத்தான நிலைமையாகும்.

எனவே கொவிட் தொற்றுக்கு பின்னரான இவ்வாறான நிலைமைகளிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதே சிறந்ததாகும் என்றார்.

No comments:

Post a Comment