திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடும் சர்வதேச கப்பல்கள் : சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு : தீர்வினை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடும் சர்வதேச கப்பல்கள் : சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு : தீர்வினை பெற்றுத்தருமாறு வேண்டுகோள்

திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடும் சர்வதேச கப்பல்களினால் சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை சாம்பல்தீவு சல்லி பிரதேச மீனவர்களே இவ்வாறு பாதிப்படைவதாக தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்படும் சர்வதேச கப்பல்கள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் நங்கூரமிடாமல் கடற்பரப்பில் விரும்பியவாறு நங்கூரமிடுவதினால் சிறு மீன்பிடி தொழிலாளிகள் மீன் பிடிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் தாம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் பொது நங்கூரமிடப்பட்டிருக்கும் கப்பலை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க விடாமல் விரட்டுவதாகவும் அதையும் மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் இலங்கை கடற்படைக்கு அறிவித்து அவர்கள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் இவ்வாறு வருகை தரும் சர்வதேச கப்பல்கள் ஒரு நேர காலம் இல்லாமல், பயணிப்பதற்கான எல்லை ஒன்று இல்லாமல், தாம் மீன் பிடிக்கும் பிரதேச எல்லையினுடாக பயணிப்பதினால் தாம் மீன் பிடிப்பதற்காக வலைகள் போட்டதன் பின்னர் இவ் சர்வதேச சரக்கு கப்பல்கள் பயணம் செய்வதினால் தமது மீன்பிடி வலைகள் வெட்டுப்பட்டு நாசம் அடைவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறு திருகோணமலைக்கு வரும் சர்வதேச கப்பல்கள் திருகோணமலை கடற்பரப்பில் விரும்பிய இடத்தில் நங்கூரமிடுவதினாலும் இவ்வாறு மீன்பிடி வலைகள் நாசம் அடைவதாகவும் சல்லி மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், வருகை தரும் கப்பல்களில் பல கழிவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு வெலிக்கம்பிகள் போன்றவை கடலில் வீசப்படுவதினால் பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் அடைவதாகவும், சல்லி கடற்பரப்பில் தமது வலைகளில் சிக்குண்ட பாதுகாப்பு வேலி கம்பிகள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தாம் கரைக்கு இழுத்து வந்ததாகவும் சில சந்தர்ப்பங்களில் தாம் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலையினை கடலிலே விட்டுச் செல்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடுவதிற்கு பல கடற்பரப்புக்கள் இருந்தபோதிலும் இவ்வாறு சிறு மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் இவ்வாறு நங்கூரமிட்டு தமது வாழ்வாதாரத்தினை அழிப்பது மனவேதனை அடைவதாக சல்லி சாம்பல்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த காலங்களில் திருகோணமலை கடற்பரப்பில் இலங்கை போக்குவரத்து பழைய வாகனங்களை மீன் இனப் பெருக்கத்திற்கு என கடலில் போடப்பட்டது. அவ்வாறு போடப்பட்ட வாகனங்களினாலும் நீரோட்ட காலப்பகுதியில் பல அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும் இதனை ஒரு சவாலாக தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவ் சர்வதேச கப்பல்கள் நங்கூரமிடுவதினால் தாம் பெரும் நட்டத்தினை எதிர்நோக்குவதாக சல்லி சாம்பல்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் தாம் மீனவ சங்கங்கள் உடாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் எமது ஜீவனோபாயத்தில் எவரும் அக்கறை கொள்ளவில்லை.

நாட்டில் விவசாயத்தினை பின்தள்ளி அரிசி இறக்குமதி செய்யப்படுவதுபோல் மீன்பிடியினையும் இல்லாதொழித்து மீன் இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாக வழிவகுக்க வேண்டாம் என சல்லி சம்புத்தீவு மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இவ் மீன்பிடி பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மண் மற்றும் உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தருமாறு மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கேசரி

No comments:

Post a Comment