எரிவாயு கலப்பை மாற்றிய காரணத்தினால் இன்று வீட்டுக்குள் குண்டுகள் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வீடுகளுக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இந்த செயற்பாடு கொலைக் குற்றமாகும். நாளையதினமும் வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கலாம். எனவே அரசாங்கம் இதனை வேடிக்கை பார்க்காது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் வலியுறுத்தினர்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தற்போது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த அச்சுறுத்தல் நிலைமைகளை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக எம்.பி கூறுகையில், எரிவாயு சிலிண்டர் வெடிப்பு என்பது பாரதூரமான ஒன்றாகும். ஆகவே மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டதை முன்னெடுக்க வேண்டும். நேற்றும் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துள்ளன. இந்த விடயத்தில் காலத்தை கடத்த வேண்டாம், உடனடியாக தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து இந்த அச்சத்தில் இருந்து மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் எம்.பி கூறுகையில், எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் ஆய்வறிக்கை ஒன்றினை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சபைப்படுத்துவதாக கூறினார். ஆனால் தற்போதுவரை குறித்த அறிக்கை சபைப்படுத்தப்படவில்லை.
ஹட்டன் நகரில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த எரிவாயு சிலிண்டர்களை பாவிக்க முடியுமா கூடாதா என அரசாங்கத்தில் பொறுப்பான எவரேனும் ஒருவர் மக்களுக்கு கூறுங்கள். அரசாங்கம் இந்த உண்மைத்தன்மையை ஏன் மறைக்கின்றது என கேள்வி எழுப்பினார்.
விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார கூறுகையில், எரிவாயு கலப்பை மாற்றிய காரணத்தினால் இன்று வீட்டுக்குள் குண்டுகள் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உள்ளவர்களின் நிலைமை மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எரிவாயு கலப்பு குறித்த ஆய்வு அறிக்கையை சபைப்படுத்துங்கள். அதுமட்டுமல்ல சட்டவிரோதமாக இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்ட நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
வீடுகளுக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக நீக்க வேண்டும். இந்த செயற்பாடு கொலைக்குற்றமாகும். நாளைய தினமும் வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கலாம். எனவே அரசாங்கம் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கப்போகின்றதா. அரசாங்கம் மக்களை முட்டாளாக்கப்பார்த்ததன் விளைவுகள் தான் இவை அனைத்துமே என்றார்.
No comments:
Post a Comment