இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றது - கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றது - கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர்

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது. தம்மால் இழைக்கப்பட்ட இனப் படுகொலையை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தாலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதை சர்வதேச சமூகம் மறக்காது என்று கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று நினைவேந்தலைச் செய்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் ஊர்காவற்றுறை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்வதற்கு முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கிகளைத் தரித்திருந்த படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

அதனையடுத்து அவ்விடத்திலேயே அமர்ந்த அவர்கள், பின்னர் படையினரின் தடைகளை உடைத்துக் கொண்டு துயிலுமில்லத்திற்குச் சென்று ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேற்குறிப்பிட்டவாறு சுகாஸ் உள்ளிட்ட தரப்பினர் தரையில் அமர்ந்திருக்க படையினர் துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் அவர்களைச் சூழ்ந்து நின்றுகொண்டிருக்கின்றவாறான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

இந்நிலையில் குறித்த புகைப்படத்தை மேற்கோள்காட்டி அதற்குக் கண்டனம் வெளியிடும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கின்ற பதிவிலேயே கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளப்பக்கங்களில் குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, 'இலங்கை அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா?' என்று கேள்வியெழுப்பியிருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இது குறித்துக் கடுமையான கண்டனத்தையும் வெளியிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment