ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சையின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார் : மீண்டும் செவ்வாயன்று சிகிச்சை - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சையின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார் : மீண்டும் செவ்வாயன்று சிகிச்சை

(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்றை அவமதித்தமைக்காக 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டனையை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அனுபவித்து வரும், கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் இவ்வாறு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

'நேற்று தேசிய வைத்தியசாலையின் உடற் கூற்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, அந்த பரிசோதனைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி செவ்வாயன்று தேசிய வைத்தியசாலையின் பரிசிசோதனைகளுக்கு உட்படுத்த வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதால், அவரை தொடர்ந்து வெலிக்கடையிலேயே தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஜூன் 19 ஆம் திகதி, அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மருத்துவ பரிசோதனைகளுக்காக காலை வேளையில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அந்த பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ள பெறுபேருகளின்படி முழங்காலில் உள்ள உபாதைக்கு தங்கியிருந்து சிகிச்சைப் பெற வேண்டிய நிலை காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

அதற்கமையவே ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதன் முதலாக காலி, கராபிட்டிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறைக் காவலர்களின் பொறுப்பில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் அவர் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதியளவில் மீள அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது அவர் தேசிய வைத்தியசாலையின் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி 04 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ ஆப்றூ தலைமையிலான நீதியர்சர்களான விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியர்சர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு கடூழிய சிறைத் தண்டனையை விதிக்கும் தீர்ப்பை நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியர்சர் சிசிர டி ஆப்றூ அரசியலமைப்பின் 105 (3) ஆம் உறுப்புரைக்கு அமைய இந்த 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, ரஞ்சன் ராமநாயக்க, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment