கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுதாபம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுதாபம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஆறு பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தமது அனுதாபத்தை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப , மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஆறு பேர் மரணித்த சம்பவம் இந்த நாட்டில் மிகப்பெரிய கவலையையும், அவலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட இருபதற்கும் மேற்பட்டோரை படகு பாதையில் ஏற்றிக் கொண்டு பயணித்த வேளையில் இந்த அனர்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆற்றிலே நடந்த அனர்த்தத்தில் ஷஹு சகி (3 1/2 வயது) ஷகிலா (6 வயது) ஹரிஸ் பஹி (6 வயது) ஸரீன் (8 வயது)ஆகிய பாடசாலை சிறுவர்களும் ஷப்ரியா (30 வயது)என்ற தாயாரும் கேத்துல் ஸாஹர் என்ற முதியவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு பிள்ளைகளுமாக 3 பேர் இறந்திருக்கின்றார்கள்.

அதே நேரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பாடசாலை சகோதரர்களும் இறந்திருக்கின்றார்கள். இது மிகவும் மோசமான, கவலை தரக்கூடிய சம்பவம் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது.

தமிழ் இஸ்லாமிய குழந்தைகள், சகோதரர்கள் இந்த விபத்தில் இறந்தமைக்கு நாம் எமது ஆழ்ந்த கவலையை இந்த சபையின் ஊடாக தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment