இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை : சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவுக்கு எதிராக விசாரணை - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை : சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவுக்கு எதிராக விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்)

இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தமை தொடர்பில் அண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இதனை பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

நீலகண்டன் & நீலகண்டன் சட்ட நிறுவனம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொடர்பாக ஜனாதிபதிக்கு முறையிட்டிருந்தது. இந்நிலையிலேயே இது குறித்து விசாரிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரண்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட இருவர், இளைஞர் ஒருவரை சுற்றி இருந்து தாக்கும் வண்ணமான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதனை மையப்படுத்தி பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன்படி சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த ரண்மல் கொடித்துவக்கு, அங்கிருந்து இடமாற்றப்பட்டு பொலிஸ் வைத்திய மற்றும் நலன்புரி பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

இரத்னபுரி - கிரி எல்ல வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பயணித்த ஜீப் வண்டியை இரத்தினபுரி - கிரியல்ல வீதியில், பின்னால் வந்த கார் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்போது காரில் பயணித்ததாக கூறப்படும் இளைஞனுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பொலிஸ் ஜீப் வண்டியின் பின் பக்கமாக உள்ள பகுதியில் வைத்து கடுமையாக தாக்குவது குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அபாயகரமாக வாகனம் செலுத்தியதாக குறித்த சாரதியை கழுத்தினால் பிடித்து பொலிஸ் ஜீப் வண்டியை நோக்கி இழுத்து வந்து தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் அதன் பின்னர், அவ்விளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரி எல்ல பொலிஸ் நிலைய அறையொன்றில் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சித்திரவதை செய்யப்பட்டதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டே விசாரணைகள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டமை குறித்து விசாரிக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment