(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியில் அடுத்தடுத்து எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இது குறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுத்து உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்ட ஏற்றுக் கொள்ளப்பட்ட தரநியமத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்படாத அனைத்து சிலிண்டர்களையும் மீளப் பெற்றுக் கொள்வதற்கும் உரியவாறு தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான சிலிண்டர்களை வழங்குவதற்கும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, அடுத்த வருடத்தை ஓர் தேர்தல் ஆண்டாகக் கருத முடியும். ஏனெனில் 2022 பெப்ரவரி மாதத்தின் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த வேண்டியிருப்பதுடன் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல்களையும் அடுத்த ஆண்டில் நடாத்த வேண்டியது அவசியமாகும்.
அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வை வழங்கும் நோக்கிலேயே மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகளும் இயங்கு நிலையில் இல்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை முறைமைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின், அவை திருத்தியமைக்கப்பட்டு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் அவ்விரு தேர்தல்களும் நடாத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதுமாத்திரமன்றி தேர்தல் வருடத்திற்குத் தயாராகும் பணிகளை எமது கட்சி முன்னெடுத்து வருகின்றது. அதன்படி இதுவரையில் கட்சி ஒருங்கிணைப்பாளர்களாக 130 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அதேபோன்று எமது ஏனைய கூட்டணிகளும் படிப்படியாகத் தயாராகி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இவ்வனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்நெருக்கடிகளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படாத நிலையில், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதை இலக்காகக் கொண்டு நாம் செயற்பட்டு வருவதுடன் அதற்கான எதிர்வரும் ஆண்டை முழுமையாக அர்ப்பணிக்கவுள்ளோம்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதன் விளைவாக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலைகள் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டன.
தற்போது பாண் உள்ளிட்ட சில பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மக்களுக்கு அவசியமான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக்கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அரசாங்கமொன்று இயங்க வேண்டியதன் அவசியமென்ன?
அதேவேளை சமையல் எரிவாயுவை சிலிண்டரைப் பயன்படுத்தும் மக்கள் அண்மைக் காலங்களில் பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். அடுத்தடுத்து எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தைத் தோற்றுவித்திருப்பதுடன் அதற்கான காரணமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுத்து உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. லிட்ரோ நிறுவனம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகும்.
லாப்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் குறித்தவொரு மட்டத்திற்குக் கட்டுப்படுத்த முடியும். எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிய தரநியமத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்படாமையே இந்த வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் என்று அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிகளவான இலாபத்தை உழைத்துக் கொள்ளும் நோக்கில் எரிவாயு சிலிண்டர்களில் உள்ளடக்கப்படும் கூறுகளின் அளவு உரிய அனுமதியின்றி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே நாடளாவிய ரீதியில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்ட ஏற்றுக் கொள்ளப்பட்ட தரநியமத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்படாத அனைத்து சிலிண்டர்களையும் மீளப் பெற்றுக் கொள்வதற்கும் உரியவாறு தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான சிலிண்டர்களை வழங்குவதற்கும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் முறைகேடாக செயற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment