(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்தியாவுக்கு வழங்கி இருக்கும் திருகோணமலை எண்ணெய்க்குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது எமது அரசாங்க காலத்தில் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அதனை மீளப்பெற முடியாதுள்ளதாக தெரிவித்து, அதனை தட்டிக்கழித்து வருகிறது.
எமது அரசாங்க காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுடன் அது தொடர்பில் புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்களே நடைபெற்றுள்ளன. ஒப்பந்தம் செய்யவில்லை. அதனால் அரசாங்கம் அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அந்த புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்கள் எந்தவித தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை.
தற்போதைய அரசாங்கம் கூறுவதுபோல் எமது அரசாங்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மேற்படி எண்ணெய்க்குதங்களை வழங்கவில்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ போட்சிட்டி நிலத்தை சீனாவுக்கு உரித்துரிமையாக வழங்கி இருந்தது. அந்த உரித்துரிமையை இல்லாமலாக்குவதாக நாங்கள் அன்று வாக்குறுதி அளித்தோம். அதேபோன்று ஆட்சிக்கு வந்ததுடன் சீனாவுடன் மோதி, போட் சிட்டியின் உரித்துரைமையை இல்லாமலாக்கி குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
ஆனால் அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை மீள பெற்றுக் கொள்வதாக தெரிவித்தபோதும் இதுவரை பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றது. அப்படியாயின் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது சீனா, அமெரிக்காவுக்கு நாட்டின் ஏனைய வளங்களை வழங்கி இருப்பதுபோல் இந்திய அரசாங்கத்துடன் அது தொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment