நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் இத்தகையதொரு மோசமான காலகட்டத்தில் வித்தியாசமானதொரு வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் சமர்ப்பித்துள்ளதாகவும் இது ஒரு சவாலான செயற்பாடாகுமென்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் நாட்டின் வளங்களை பாதுகாப்பதுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முக்கியமான நோக்கமாகும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் நாட்டின் கொரோனா சூழ்நிலையை மறந்தே எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவில் 08 இலட்சம் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்துள்ளனர். அதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி பெயிலாகி விட்டார் என அந்த நாட்டு மக்கள் கூறவில்லை.
மிக மோசமான ஒரு காலகட்டத்தில் சிறந்த வரவு செலவுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன் வைத்துள்ளது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
ஜெர்மனியில் ஒரு நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒரே நாளில் ஆயிரத்து 237 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
அந்த வகையில் 80 மில்லியன் டொலர் புரள்வைக் கொண்ட எம் போன்ற ஒரு சிறிய நாட்டில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மிகவும் சிறப்பானது.
ஜனாதிபதியின் சிறந்த தீர்மானங்களால் நாட்டு மக்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆசியாவில் தடுப்பூசி வழங்குதலில் இலங்கை முதலிடத்தை வகிக்கின்றது.
கோடிக்கணக்கான நிதி அதற்காக செலவிடப்பட்டு வருவதுடன் வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
நாட்டின் இத்தகைய சூழலில் வீழ்ச்சியுற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமே தவிர விமர்சனங்களை முன்வைக்கும் நேரம் இதுவல்ல.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment