பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் இன்று (05) மீட்கப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை - சம்மாந்துறை பிரதான வீதியில் காணப்பட்ட சடலம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் - 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
குறித்த பகுதிக்கு சந்தேகநபருடன் விரைந்த பொலிசார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் வீசப்பட்ட சிசுவை மீட்டெடுத்தனர்.
தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேகநபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்த சிசுவைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச் செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாளாந்த கூலித் தொழிலாளியான குறித்த சந்தேகநபர், இரண்டாவது திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment