அரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை பார்படாஸ் நீக்கியுள்ளது. இதன் மூலம் செவ்வாயன்று அதன் முதல் ஜனாதிபதியுடன் ஒரு புதிய குடியரசை கரிபியன் தீவான பார்படாஸ் உருவாக்கியுள்ளது.
கரீபியன் தீவுக்கு முதல் ஆங்கிலக் கப்பல்கள் வந்து ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் கடைசி எஞ்சிய காலனித்துவ பிணைப்புகளை பார்படாஸ் துண்டித்துள்ளது.
தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள சேம்பர்லைன் பாலத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் செவ்வாய் நள்ளிரவு புதிய குடியரசு பிறந்தது.
கூட்ட நெரிசலான ஹீரோஸ் சதுக்கத்தில் பார்படாஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது 21 துப்பாக்கி தோட்டாக்கள் சுடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜமைக்கா உள்ளிட்ட 15 பிற நாடுகளுக்கும் இன்னும் ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத் இன் காலனித்துவ வரலாற்றினை முறித்துக் கொண்ட இறுதி நாடாக பார்படாஸ் மாறியது.
பார்பேடியன் நடனம் மற்றும் இசையின் திகைப்பூட்டும் காட்சிக்குப் பிறகு, காலனித்துவத்தின் முடிவைக் கொண்டாடும் உரைகளுடன், முதல் ஜனாதிபதியாக சாண்ட்ரா மேசன் பதவியேற்றார்.
ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படாஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையைத் நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாறி இருக்கிறது. இதன் மூலம் கடந்த 400 ஆண்டுகளாக பிரிட்டனோடு இருக்கும் உடன்பாடு முடிவுக்கு வருகிறது. இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியே நாட்டின் தலைவராக இருப்பார்.
பார்படாஸ் நாட்டின் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்டு 55 ஆண்டுகளுக்குப் பிறகு, 1625ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தோடு பார்படாஸை இணைத்து வைத்திருந்த எல்லா உடன்படிக்கைகளிலிருந்தும் கிட்டத்தட்ட தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டுள்ளது பார்படாஸ்.
கடந்த 30 ஆண்டுகளில், அரசி இரண்டாம் எலிசபெத்தை நாட்டின் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் முதல் நாடு பார்படாஸ்தான். கடைசியாக 1992ஆம் ஆண்டு மொரீஷியஸ் நாடு, தன் நாட்டின் தலைவர் பதவியிலிருந்து மகாராணி எலிசபெத்தை நீக்கியது.
இப்போதும் யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா போன்ற 15 நாடுகள் அரசி இரண்டாம் எலிசபெத்தை தங்கள் நாட்டின் ராணியாகக் கருதி மதித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலா துறையை அதிகம் நம்பியிருக்கும் இந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது என ஏ.எஃப்.பி மற்றும் ராய்டர்ஸ் முகமைகளில் செய்தி வெளியாகியுள்ளது. காரணம், பிரிட்டனில் இருந்துதான் இந்நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து போகின்றனர்.
பிரிட்டனின் அரசி இரண்டாம் எலிசபெத்தான் பார்படாஸ் நாட்டின் தலைவராக (ஹெட் ஆஃப் ஸ்டேட்) பதவியில் இருந்தார். அவரது பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் சாண்ட்ரோ மசோன் இருந்தார்.
நாட்டின் தலைவர் என்று பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசியை நீக்குவது குறித்து கடந்த ஆண்டிலேயே பார்படாஸ் அறிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் சாண்ட்ரோ மசோன் வெற்றி பெற்றார். மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பதிலாக, அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில், இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டார்.
சுமார் 2.85 லட்சம் பேரைக் கொண்ட சிறிய தீவு நாடான பார்படாஸ், 1834ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு அடிமை முறையை எதிர்கொண்டு வந்தது. 1966ஆம் ஆண்டுதான் முழுமையாக சுதந்திரமடைந்தது.
பார்படாஸ் நாட்டை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய போது அங்கு மக்கள் அதிகம் வசிக்கவில்லை. புகையிலை, பருத்தி, இண்டிகோ, சர்க்கரை பயிரிட நிலம் பயன்படுத்தப்பட்டது. வெகு சில தசாப்தங்களில் பார்படாஸ் ஆங்கிலேயர்களின் முதல் லாபகரமான அடிமை சமூகங்களைக் கொண்ட பிராந்தியமானது.
1627 முதல் 1833 வரையிலான ஆண்டுகளுக்கு மத்தியில், ஆறு லட்சம் ஆப்பிரிக்க அடிமைகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் சர்க்கரை பயிரிடும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
1838ஆம் ஆண்டு வரை அடிமைமுறை இருந்தது. 1966ஆம் ஆண்டுதான் பார்படாஸ் முழுமையாக சுதந்திரம் பெற்றது.
"எங்கள் காலனி ஆதிக்க வரலாற்றை முழுமையாக கைவிடும் நேரம் வந்துவிட்டது" என பார்படோஸ் நாட்டின் பிரதமர் மியா மொட்டெலி கடந்த 2020ஆம் ஆண்டு ஓர் உரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment