(இராஜதுரை ஹஷான்)
இரசாயன உரப் பாவனையினால் எவ்வித பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை. இல்லாத பிரச்சினையை உருவாக்கியதால் பெரும்போக விளைச்சல் முழுமையாக இல்லாதொழிந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பெரும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறந்த திட்டமிடல்கள் இல்லாத காரணத்தினால் பெரும்போக விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இதனூடாக விளங்கிக் கொள்ள முடியும்.
இரசாயன உரம் காரணமாக எவ்வித பிரச்சினையும் இதுவரை காலமும் தோற்றம் பெறவில்லை. இல்லாத பிரச்சினையை உருவாக்கிய காரணத்தினால் இன்று விவசாயத்துறை பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. பசுமை பொருளாதாரம் என குறிப்பிடப்படுகிறது.
மனிதன் நாளாந்தம் உட்கொள்ளும் உணவு பொருட்கள், மருந்து வகைகள் அனைத்தும் இரசாயன தன்மையில் காணப்படுகிறது. இரசாயன உரம் தொடர்பில் க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் சேதன பசளை திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தப்படவில்லை.
பெரும்போக விவசாயம் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும். சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
சேதன பசளை திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் விசேட கவனம் செலுத்தாமலும், துறைசார் நிபுணர்களினதும், மக்களினதும் ஆலோசனைகளை கோராமல் விரைவாக திட்டம் செயற்படுத்தியதால் இன்று பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment