கோரிக்கைகளுக்கு இவ்வாரத்திற்குள் உறுதியான தீர்வை வழங்காவிடின் 9ஆம் திகதி முழு அரச சேவையும் ஸ்தம்பிதமடையும் : இலங்கை அரசாங்க உத்தியோகப்பூர்வ சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, November 30, 2021

demo-image

கோரிக்கைகளுக்கு இவ்வாரத்திற்குள் உறுதியான தீர்வை வழங்காவிடின் 9ஆம் திகதி முழு அரச சேவையும் ஸ்தம்பிதமடையும் : இலங்கை அரசாங்க உத்தியோகப்பூர்வ சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு

.com/img/a/
(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக 16 ஆயிரம் ரூபா வரை சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நான்கு பிரதான கோரிக்கைகளுக்கு இவ்வாரத்திற்குள் உறுதியான தீர்வை அரசாங்கம் வழங்காவிடின் எதிர்வரும் 9ஆம் திகதி முழு அரச சேவையும் ஸ்தம்பிதமடையும். அரச சேவையாளர்களை புறக்கணித்து 10ஆம் திகதி வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என இலங்கை அரசாங்க உத்தியோகப்பூர்வ சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.எ.பி பஸ்நாயக்க தெரிவித்தார்.

சகல அரச சேவையாளர்களும் நேற்றையதினம் நாடு தழுவிய ரீதியில் அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் முன்பாக பகல் உணவு இடைவேளையின் போது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். அப்போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச சேவையாளர்கள் புறக்கணிக்கப்பட்டதன் பிரதிபலனை அரசாங்கம் இனிவரும் தேர்தல்களில் நன்கு விளங்கிக் கொள்ளும்.

வாழ்க்கை செலவு உயர்விற்கேற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் வரை அதிகரிக்க வேண்டும். 16 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு பிரதான கோரிக்கையாக காணப்படுகிறது.

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒய்வூதியம் பெறுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை அக்ரகார காப்புறுதிக்கு தன்னிச்சையாக அறவிடும் பிரச்சினை காணப்படும் சூழல் காணப்படும் பட்சத்தில் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடித்துள்ளமை முறைகேடானதாகும். ஆகவே, அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 65 என்ற தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் இலாபத்திற்காக அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அரச சேவையாளர்களின் சேவை நாட்டுக்கு இன்றியமையாதது. ஆகவே அரச சேவையாளர்களை அவமதிக்கும் வகையில் குறிப்பிட்ட கருத்தை அவர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் வகையில் பொது நிர்வாக சேவை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மீளப் பெற வேண்டும் ஆகிய நான்கு பிரதான கோரிக்கைகளை கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்வைத்தோம்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரையில் எவ்வித பதிலும் ஜனாதிபதியிடமிருந்தும், அரசாங்க தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப் பெறவில்லை.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்து நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டோம். இவ்வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை முழு அரச சேவையில் ஸ்தம்பிதமடையும் ஒரு நாள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காவிடின் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம். அப்போராட்டம் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *