ஜனவரி முதலாம் திகதிக்கு பிறகு 55 வயதை அடையும் அரச ஊழியர்கள் விரும்பினால் ஓய்வு பெறலாம் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத், அரச ஊழியர்கள் ஓய்வுறும் திகதி ஆரம்பிக்கும் தினம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
விஜித்த ஹேரத் தொடர்ந்து தெரிவிக்கையில், வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65 வரை அதிகரிப்பதாக அறிவித்திருந்தார். இதனால் அரச ஊழியர்கள் மத்தியில் பாரிய குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதியில் பல ஓய்வு பெறுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றனர். அதனால் அவ்வாறான அரச ஊழியர்களின் நிலை என்ன? அரசாங்கம் தெரிவித்திருக்கும் ஓய்வு பெறும் வயது அமுலுக்கு வரும் திகதி தெரிவிக்கப்படவில்லை. அதனாலும் அரச ஊழியர்கள் குழப்பமடைந்திருக்கின்றனர்.
அத்துடன் ஓய்வூதியர்களின் ஓய்வூதிய சம்பள முரண்பாடு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகத்துக்கும் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அவர் தற்போது நீதிமன்றம் சென்றிருக்கின்றார்.
2 வருடமாகியும் அவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை. இதன் காரணமாக நாட்டில் 6 இலட்சத்தி 60 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சம்பள முரண்பாட்டை எவ்வாறு தீர்ப்பதென்று அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் அரச ஊழியர்களுக்கு வழங்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2014ஆம் ஆண்டுக்கு பிறகு வாழ்க்கைச் செலவுக்கேற்ப வழங்கவில்லை.
நுகர்வோர் பாதுகாப்பு அதிககார சபையின் அறிக்கையின் பிரகாரம் 2014 முதல் இன்று வரை வாழ்க்கைச் செலவாக அரச ஊழியர்களுக்கு 14 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மொத்தமாக 21ஆயிரத்தி 900 ரூபா அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவாக அரசாங்கம் வழங்க வேண்டும். அந்த காெடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்திடம் பதிலும் இல்லை என்றார்.
இதற்கு அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் பதிலளிக்கையில், அரச ஊழியர்கள் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர், 55 வயதுக்கு பிறகு அவர்கள் விரும்பினால் ஓய்வு பெறலாம். 65 வயது வரை இருக்க வேண்டும் என கட்டாயம் இல்லை என்றார்.
No comments:
Post a Comment