(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் நாட்டின் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான 2021/22 பருவ காலத்துக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இப்போட்டித் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தலினால், வீரர்கள் போதியளவு பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் போனதன் காரணமாக இப்போட்டித் தொடரை எதிர்வரும் 27 ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு இம்மாதம் முதலாம் திகதியன்றே தளர்த்தப்பட்டது.
இதனால் செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதியன்று ஆரம்பமாகவிருந்த 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் மற்றும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று ஆரம்பமாகவிருந்த 3 நாட்கள் கொண்ட முதற்தர போட்டித் தொடர் என்பன பிற்போடப்பட்டன.
எவ்வாறாயினும், கழகங்களுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், 3 நாட்களைக் கொண்ட முதற்தர போட்டித் தொடர் எப்போது ஆரம்பமாகும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதுவரை குறிப்பிடவில்லை.
26 கழகங்கள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் தலா 13 அணிகள் ஏ,பீ என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன. இதன் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் ஒக்டோபர் 27,30,31 ஆம் திகதிகளிலும், நவம்பர் மாதம் 3,6,7,10,13,14,17,20,21,24 ஆகிய 13 தினங்களில் நடத்தப்படவுள்ளன.
அரை இறுதிப் போட்டிகள் நவம்பர் 26 ஆம் திகதியன்றும், இறுதிப் போட்டி 28 ஆம் திகதியன்றும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment