இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் வகையில் அமைந்துள்ளன - அஹிம்சா விக்ரமதுங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் வகையில் அமைந்துள்ளன - அஹிம்சா விக்ரமதுங்க

(நா.தனுஜா)

இஸ்லாம் என்பது அமைதியை முன்னிறுத்துகின்ற ஓர் மதமாகும். இருப்பினும் இலங்கை அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கொள்கைகள் வெளிப்படையாகவே சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் பெண்களையும் இலக்கு வைக்கும் வகையில் அமைந்திருப்பதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையின சமூகத்தை இலக்கு வைக்கும் விதத்திலான அரசாங்கத்தின் கொள்கைகள் தீவிரமடைந்ததையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற தொடர்ச்சியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளினால் இலங்கையின் முஸ்லிம் சமூகம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையினால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி மிகுந்த விசனத்திற்கும் கரிசனைக்கும் உரிய இந்தப்போக்கை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் 'இலங்கை : முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்' என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்ட அவ்வறிக்கையை மேற்கோள்காட்டி அஹிம்சா விக்ரமதுங்க அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'இஸ்லாம் என்பது அமைதியை முன்னிறுத்துகின்ற ஓர் மதமாகும். இருப்பினும் இலங்கை அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கொள்கைகள் வெளிப்படையாகவே சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் பெண்களையும் இலக்கு வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்துத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகளால் அச்சமூகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய மோசமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment