(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஜனாதிபதி தயார் என்றால் உயிரற்று இருக்கும் மாகாண சபைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க கூடாது. அதற்கு புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும் என பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல புதிய அரசியலமைப்பொன்றின் தேவை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என நீண்ட காலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 1972 குடியரசு அரசியலமைப்புக்கு பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையுடன் பல முன்மொழிவுகள் அடங்கிய அரசியலமைப்பொன்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்டது. அதில் இருந்த குறைகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக அந்த அரசியலமைப்புடன் நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது என்ற தீர்மானத்துக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனால் பொதுமக்கள், தேசிய அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை தொடர்பாக முன்மொழிந்திருந்தனர். அதனால் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கு இது நல்ல சந்தர்ப்பமாகும்.
புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான வழி திறக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது தேர்தல் முறைமையையும் மாற்றியமைக்க வேண்டி இருக்கின்றது.
அதனால் காலம் கடந்து மரணித்திருக்கும் மாகாண சபை தேர்தல் முன்மொழிவுகளை கொண்டு வந்து புதிதாக மாகாண சபைகளை ஏற்படுத்துதல் அல்லது மாகாண சபைகளை புதுப்பிப்பதற்கு பதிலாக, புதிய அரசியலமைப்பு ஊடாக புதிய பாராளுமன்ற தேர்தல் முறை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையுடன் உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறைமை ஒன்றுக்கமைய அமைத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment