(ஆர்.யசி, எம்.ஆர்.எம்,வசீம்)
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களில் 65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்கள் எனவும், இந்த வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ். ஸ்ரீதரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஆளணி நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வலவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் சார்பாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் 519 ஆக உள்ள நிலையில் 419 ஊழியர்களே பணியில் உள்ளனர். இவர்களில் 65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்கள். 35 வீதமானவர்கள் மட்டுமே தமிழ், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஸ்ரீதரன் எம்.பி, கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வீதம் தமிழ் மக்கள் வாழும் நிலையில் 65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக் கூடியவர்களாக இருப்பது எந்த வகையில் நியாயம்? இதனால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதிலளிக்கையில், வைத்தியர்கள், ஊழியர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையிலேயே கிளிநொச்சி வைத்தியசாலைக்கான ஆளணி நியமனங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது என்றார்.
No comments:
Post a Comment