கப்ராலுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா? - தீர்மானத்தை அறிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

கப்ராலுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா? - தீர்மானத்தை அறிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட முடிவினை செல்லுபடியற்றது என அறிவிக்கக் கோரியும் அவரைக் கைது செய்து விசாரணை செய்ய பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டளை நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி தீர்மானத்தை அறிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த மனுவானது இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே நீதிமன்றம் இதனை அறிவித்தது.

இன்று மன்றில் ஆஜராகிய அனைத்து தரப்புக்களினதும் சட்டத்தரணிகள் மனு தொடர்பிலான எழுத்து மூல சம்ர்ப்பணங்களை முன் வைத்துள்ளதாக மன்றுக்கு அறிவித்தனர். அதனையடுத்தே நீதிமன்றம் மேற்படி விடயத்தை அறிவித்தது.

முன்னதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய ஆளுநர் பதவிக்கு நியமிப்பதை தடுக்க கோரி கடந்த செப்டம்பர் 14 அம் திகதி தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிபேராணை மனுவொன்றினை தாக்கல் செய்தார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளை மையப்படுத்தி அஜித் நிவார்ட் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் ,அஜித் நிவார்ட் கப்ரால் , ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம். ஜே.வை, பி பெர்னான்டோ ஆகியோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment