காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதியினால் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டிருந்தனர்.
அதனடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொறோனா பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையினால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திப்பில் குறித்த விவகாரம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, காணாமல் போனோரின் உறவினர்களின் விவகாரத்தினை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
உறவுகள் காணாமல் போனதினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளை கவனத்திலெடுத்து அவற்றினை தீர்ப்பதற்கும், தேவையான பரிகாரங்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment