சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்துள்ள பெண் சிறைக் கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி மற்றும் அதற்குரிய உதிரிப் பாகங்களையும் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கண்டி போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேற்படி கையடக்கத் தொலைபேசி அதற்குரிய பற்றரி மற்றும் ஏனைய உதிரிப்பாகங்களை குறித்த பெண் சிறைக் கைதிக்கு வழங்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேற்படி வைத்தியசாலையிலுள்ள பிரதம மருத்துவ அதிகாரியின் உத்தியோகபூர்வ அறைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சிறைக் கைதியான அந்தப் பெண் வருகை தந்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்திலேயே கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உதிரிப் பாகங்களையும் குறித்த மருத்துவர் மேற்படி பெண்ணிடம் கையளிப்பதற்கு முயற்சிக்கையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..
சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment