நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை கூறுகிறது.
நடிகர் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.
இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்த் நேற்று சிறிய தலைசுற்றலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் (Carotid Artery) அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளது. இதையடுத்து அவருக்கு அந்த அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு நீக்கப்பட்டதா அல்லது ஸ்டென்ட் பொருத்தப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
அவர் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என காவிரி மருத்துவமனையில் அறிக்கை கூறுகிறது.
ரஜினிக்கு இதற்கு முன்பாக 2011ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார்.
2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், பக்கவாதத்திற்கு முந்தைய நிலையான மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment