(எம்.மனோசித்ரா)
சதொச வெள்ளைப்பூண்டு மோசடியுடன் எனக்கு தொடர்பிருக்கிறது என்று நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சு பதவியை துறப்பதோடு மாத்திரமின்றி இலங்கை அரசியலிலிருந்தும் விலகுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மீண்டும் தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சதொச வெள்ளைப்பூண்டு மோசடி விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்த நாள் முதல் முறையான விசாரணைகளும், சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் என்ற ரீதியில் நானோ, என்னுடைய பிள்ளைகளோ, எனது தனிப்பட்ட நிர்வாகத்தினரோ இந்த மோசடியுடன் தொடர்புபட்டுள்ளோம் என்று நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமை, அமைச்சு பதவி என்பவற்றை துறப்பதோடு மாத்திரமின்றி இலங்கை அரசியலிலிருந்தும் விலகுவேன்.
எனவே எனது தொடர்பில் தகவல்களை அறிந்து வைத்திருப்பவர்கள் அவற்றை ஆதாரத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்க முடியும். அதுவே இதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு செய்யும் பாரிய உதவியாகும்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.
No comments:
Post a Comment