வாழ்க்கைச் செலவைக் குறைக்க எந்த வழியிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர், தள்ளிவிட்டால் விழும் நிலைக்கே அரசாங்கம் - சமன் ரத்னப்பிரிய - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

வாழ்க்கைச் செலவைக் குறைக்க எந்த வழியிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர், தள்ளிவிட்டால் விழும் நிலைக்கே அரசாங்கம் - சமன் ரத்னப்பிரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருக்கின்றது. அதனால் அரசாங்கம் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு எந்த வழியிலாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அரசாங்கத்தின் இயலாமையின் காரணமாகவே அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளன என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களும் தோலிவியடைந்துள்ளன. அதனால் மக்களும் இந்த அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்திருக்கின்றனர். அதனால் தள்ளிவிட்டால் விழும் நிலைக்கே அரசாங்கம் இருக்கின்றது. முறையான முகாமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணமாகும். அதனால் நாட்டின் வரலாற்றில் மிக பலவீனமான அரச தலைவராக கோத்தாய ராஜக்ஷ இடம் பிடித்திருக்கின்றார்.

அத்துடன் பொருட்களின் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கின்றது. அரிசிக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் நீக்கிக் கொண்டதால், பல்வேறு விலைக்கு இன்று அரிசி விற்பனையாகி வருகின்றது. அரசாங்கத்துக்கு இதனை முகாமைத்துவம் செய்ய முடியாமல், அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசி விலையை தீர்மானிப்பதற்கு அரசாங்கம் இடமளித்திருக்கின்றது.

அதேபோன்று பல்வேறு காரணங்களை தெரிவித்து இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டதுடன் உள்நாட்டு பால்மா விலையும் அதற்கு நிகராக விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. எந்த காரணத்துக்காக உள்நாட்டு பால்மாவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என கேட்கின்றோம்.

மேலும் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்திருக்கின்றார். உலகில் பெற்றோலிய கூட்டுத்தானம் நட்டத்தில் செல்வது இலங்கையில் மாத்திரமாகும். இலாமமீட்டிக் கொள்ள இவர்களுக்கு தெரியாது. அதிகாரிகளின் ஊழல், மோசடியே இதற்கு காரணமாகும்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் எரிபொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டு விலையை அதிகரிக்கும். இதுதான் இந்த அரசாங்கத்தின் விலை சூத்திரம்.

அத்துடன் மக்களின் வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. ஆனால் அதற்கு நிகரான சம்பள அதிகரிப்பு இல்லை. வாழ்க்கைச் செலவுக்கமைய அரச, தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதில்லை.

இன்று தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளம் 16 ஆயிரத்தி 500 ரூபாவாகும். ஆனால் வாழ்க்கைச் செலவுக்கமைய 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதத்துக்கு 61 ஆயிரத்தி 690 ரூபா தேவை.

அப்படியாயின் மக்கள் எவ்வாறு வாழ்வது.? அதனால் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த வழியிலாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதற்கு மாற்று வழி இல்லை.

ஏனெனில் சம்பள அதிகரிப்பு என்பது சாத்தியப்படாத ஒன்று. தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இன்னும் முறையாக வழங்கவில்லை.

வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் இன்று இளைஞர்கள் நாட்டில் வாழ முடியாது வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இன்று ஒரு வாரத்துக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான வெளிநாட்டு கடவுச்சீட்டு விற்பனையாகி வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment