(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்திற்கு நவம்பர் 21 ஆம் திகதி வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் கூறுகின்றது, அப்போது தீர்வுகளை வழங்க முடியும் என்றால் அதனை ஏன் இப்போதே பெற்றுக் கொடுக்க முடியாது என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆரிசியர் சங்கங்களை சமூகத்திற்கு எதிராக திசை திருப்பும் அரசாங்கம் முயற்சிப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்ற வேளையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஆரிசியர் சங்கத்தின் போராட்டம் மிகப்பெரிய நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை தீர்க்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதுள்ளது. காலையில் அனுரகுமார திசாநாயக எம்.பி சபையில் இந்த விடையம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கான பதிலை அரசாங்கம் முன்வைத்திருந்த நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரவு செலவு திட்டத்தின் இதற்கான தீர்வுகளை வழங்குவதாக கூறியுள்ளனர்.
தீர்வுகளை வழங்குவதென்றால் நவம்பர் மாதம் 21ஆம் திகதி வரையில் காலம் வழங்குவது எதற்கு, ஆசிரியர் சங்கங்களை அழைத்து இப்போதே அதற்கான வாக்குறுதியை வழங்கி நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ள முடியும்,
ஆசிரியர் சங்கங்கள் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தவே கூறுகின்றனர், அதேபோல் 2018 ஆண்டு முன்னைய அரசாங்கம் முன்வைத்த யோசனையை அரசங்கம் நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதாக கூறுவதில் நியாயம் இல்லை.
அதுமட்டும் அல்ல, ஆசிரியர் சங்கங்கள் போரட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இருநூறுக்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது முற்று முழுதாக ஆரிசியர் சங்கங்களை சமூகத்திற்கு எதிராக திசை திருப்பும் நோக்கமேயாகும்.
பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பல மில்லியன் ரூபாக்களை அரசாங்கம் ஒதுக்குகின்ற நிலையில், பல மில்லியன் ரூபா கறுப்புப் பணம் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காது அரசாங்கம் செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது.
கடந்த 2018 ஆண்டு முன்னைய அரசாங்கம் ஆரிசியர் பிரச்சினைகள் குறித்து முன்வைத்த யோசனைகளை ஏற்றுக் கொள்வதாக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது, ஆகவே அரசாங்கம் இந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும் எனவும் அவர் சபையில் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment