டெல்டா பிளஸ் வைரசும் இலங்கைக்குள் நுழையும் அபாயம் : அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக சுகாதாரத் தரப்பு தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

டெல்டா பிளஸ் வைரசும் இலங்கைக்குள் நுழையும் அபாயம் : அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக சுகாதாரத் தரப்பு தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

உலகின் பல நாடுகளிலும் தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா பிளஸ் குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் கொவிட்-19 மற்றும் டெல்டா உள்ளிட்ட வைரசுக்கள் நாட்டுக்குள் நுழைந்ததைப் போலவே, தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரசும் இலங்கைக்குள் நுழையும் அபாயம் காணப்படுவதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இலங்கை மருத்துவ சங்கம்
இது தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணர்தன தெரிவிக்கையில், 'புதிய பிரழ்வாக டெல்டா பிளஸ் இனங்காணப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த புதிய பிரழ்வு எவ்வாறு பரவும், மனிதனுக்கு எவ்வாறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. எனவே ஏனைய பிரழ்வுகளைப் போலவே டெல்டா பிளஸ் பிரழ்வும் நாட்டுக்குள் நுழையக்கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்' என்றார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
உலக நாடுகளில் பலவற்றில் இந்த டெல்டா பிளஸ் பிரழ்வு இனங்காணப்பட்டுள்ளது. எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் எமக்கு எவ்வித அறிவிப்புக்களையும் வழங்கவில்லை. தற்போதுள்ள பிரழ்வுகளிலிருந்து சற்று மாறுபற்ற குணத்தையே அவை கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாம் இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு உள்ளிட்ட சகல தரப்பினரும் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.

No comments:

Post a Comment