ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரும் வீதிகளையும் அபிவிருத்தி செய்வோம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரும் வீதிகளையும் அபிவிருத்தி செய்வோம் - அமைச்சர் ஜோன்ஸ்டன்

விவசாயப் பிரதேசங்களிலுள்ள வீதிகள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் இருக்கம் மற்றும் அவற்றுக்கு பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை வழங்கப்படும். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரும் வீதிகளையும் அபிவிருத்தி செய்வோம் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் விவசாயப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு தாமதமின்றி தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கான அனைத்து பிரவேசவீதிகள் அனைத்தையும் மட்டுமன்றி கிராமப்புற மருத்துவமனைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளும் முன்னுரிமை அளிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகளினால் தமது பிரதேசங்களில் அபிவிருத்தி செய்வதற்கு முன்வைக்ககும் யோசனைகள் அனைத்தையும் முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment