(இராஜதுரை ஹஷான்)
புகையிரத பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை போக்கு வரத்து அமைச்சோ அல்லது புகையிரத திணைக்களமோ எடுக்கவில்லை. சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணி எடுத்த தீர்மானத்தை செயற்படுத்தியுள்ளோம். இத்தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற தீர்மானம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர்மேலும் குறிப்பிடுகையில், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாண எல்லைக்குட்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்கு வரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று மாத்திரம் 130 இற்கும் அதிகமான புகையிரத பயண சேவைகள் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.
புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொண்ட பருவகால அட்டையை (சீசன்) இம்மாதம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம்தான் புகையிரத சேவையினை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை போக்கு வரத்து அமைச்சோ, புகையிரத திணைக்களமோ முன்னெடுக்கவில்லை.
புகையிரத சேவையில் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாக உள்ளது. இவ்வாறான நிலையில் நிபந்தனையின் அடிப்படையில் புகையிரத சேவையை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம்தான் புகையிர சேவையை பயன்படுத்த முடியும் என்ற தீர்மானம் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய கொவிட்-தடுப்பு ஜனாதிபதி செயலணியால் முன்னெடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை மாற்றுவதற்கு பல சந்தர்ப்பங்களில் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்படும். அப்போது பருவகால அட்டை என்ற வரையறை தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment