சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பெற்றது இலங்கை உர நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 23, 2021

சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பெற்றது இலங்கை உர நிறுவனம்

சீன நிறுவனத்திற்கு கொடுப்பனவை மேற்கொள்வதை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவை இலங்கை உர நிறுவனம் பெற்றுள்ளது.

குறித்த சீன நிறுவனம் அதன் உள்ளூர் பிரதிநிதி கடன் கடிதத்தை வழங்கியுள்ள உரிய அரச வங்கிக்கு எதிராக குறித்த இடைக்கால தடையுத்தரவை, இலங்கை உர நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேதனப் பசளையை இந்நாட்டுக்கு கொண்டுவரும் விலைமனு கோரலைப் பெற்ற சீன நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட பசளை மாதிரி, விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அர்வீனியா (Erwinia) எனப்படும் பாதிப்புக்குரிய பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு, இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தினால், குவின்ங்டாவோ சீன நிறுவனம், அதன் உள்நாட்டு முகவர் மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக, வணிக மேல் நீதிமன்றத்தினால் நேற்று (22) இடைக்காலத் தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவின் மூலம், சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் கம்பனி (Qingdao Seawin Biotech Group Co.) என்ற நிறுவனத்துக்குத் திறக்கப்பட்ட கடன் கடிதத்தின் (Letter of Credit) கீழ், மக்கள் வங்கியின் மூலம் எவ்விதக் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது.

மேற்படி சீன நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவரர் ஆகியோர், இந்தக் கடன் கடிதத்தின் கீழ் எவ்விதக் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில், வணிக மேல் நீதிமன்றத்தின் மூலம் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

அரச சட்டத்தரணி ஷெஹான் சொய்சா, கலாநிதி சாருக்க ஏக்கநாயக்க, பிரதி சொலிசிஸ்ட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரனுடன் மேலதிக சொலிசிஸ்ட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்தி ஆகியோர், இலங்கை உரக் கூட்டுத்தாபனம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்தின் மூலம் உயிரிய சேதனப் பசளையை இலங்கைக்கு அனுப்புவதற்கு அவசியமாக இருந்தபோதும், அதில் நுண்ணுயிர்கள் இருக்க முடியுமென்று கப்பல் ஆலோசனைகளில் (shipping advice) குறித்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை (National Plant Quarantine Service) மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் பரீட்சிக்கப்பட்டுள்ளதுடன், பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருசில பக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அதில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இவை, கமத்தொழில் அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியைக் கொண்ட விலை மனுக் கோரலின் மூலம் பெற்றுக்கொண்ட ஏற்றுமதியின் (shipment) ஒரு பகுதியாகும்.

No comments:

Post a Comment