தனியார் துறை ஊழியர் ஓய்வு வயதெல்லை 60 : இணைய பாதுகாப்பு தொடர்பில் 2 சட்டங்கள் : அழைப்பாணை பிறப்பித்தல், வழங்க e-Mail, SMS : 2022 பட்ஜெட்டுக்கு நிகழ்ச்சி நிரல் : தேசிய மரபுரிமைகளை அடையாளங்காண பொறிமுறைகள் - இவ்வார அமைச்சரவையில் 5 தீர்மானங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

தனியார் துறை ஊழியர் ஓய்வு வயதெல்லை 60 : இணைய பாதுகாப்பு தொடர்பில் 2 சட்டங்கள் : அழைப்பாணை பிறப்பித்தல், வழங்க e-Mail, SMS : 2022 பட்ஜெட்டுக்கு நிகழ்ச்சி நிரல் : தேசிய மரபுரிமைகளை அடையாளங்காண பொறிமுறைகள் - இவ்வார அமைச்சரவையில் 5 தீர்மானங்கள்

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்ட அடிப்படைச் சட்டமூலம், பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆடைக் கைத்தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியானதும் சட்டரீதியானதுமான விடயங்கள் பற்றி ஆராயும் குழுவில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஒய்வு வயதை 60 வரைக்கும் நீடிப்பதற்கும், சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 வயது அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களின் வயதுக்கேற்ப மூன்று பிரிவுகளின் கீழ் உச்சபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை

உள்வாங்கி சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயதுச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2. இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வகுத்தல்

(அ) பாதுகாப்பு இணைய கட்டளை சட்டம் (Defense Cyber Commands Act) எனும் பெயரிலான சட்டமூலம் தயாரித்தல்

இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்காக இணையவெளி (Cyber Space) மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தூண்டப்பட்டுள்ளனர்.

இணையவெளி (Cyber Space) மூலம் மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் தொடர்பாடல்கள் தேசிய பாதுகாப்புக்கு நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் காரணி எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் தற்போது தத்தமது நிறுவன மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு (Cyber Security) அலகின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மேலும் முறையான வகையிலும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் தேவையான ஏற்பாடுகளை உள்வாங்கி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக புதிய சட்டமொன்றை வகுப்பதற்கான தேவையுள்ளது.

(ஆ) இணைய (Cyber) பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரித்தல்

இணைய பாதுகாப்பு (Cyber Security) மற்றும் அதற்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது, தொழிநுட்ப அமைச்சின் விடயத்தலைப்பின் கீழ் காணப்படுகின்றது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் ஏற்புடைய ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர், பாதுகாப்புத் துறையின் இணைய பாதுகாப்பின் (Cyber Security) ஏற்பாடுகள் உள்ளடங்கலாக மேற்படி (அ) பகுதியின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு வேறானதொரு சட்டமூலம் தயாரிப்பது உகந்ததெனப் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு ஏற்புடைய விடயங்கள் தவிர்ந்த தேசிய தகவல்கள் மற்றும் இணைய பாதுகாப்பு (Cyber Security) மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் சட்டம்மொன்றை தயாரித்தல், குறித்த பணிகளுக்காக ஏனைய பங்காள நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்காக ஏற்பாடுகளை வகுத்தல், நாட்டில் தீர்மானம் மிக்க முக்கியமான தகவல்கள் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை அடையாளங் காணல், இணைய பாதுகாப்புக்கு (Cyber Security) ஏற்படும் ஆபத்து நேர்வுகளுடன் கூடிய செயற்பாடுகளைத் தடுத்தல் மற்றும் நாட்டில் முறையான இணைய பாதுகாப்பு (Cyber Security) சூழலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுள்ளது.

அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. குடியியல் வழக்குக் கோவை (101 ஆவது அத்தியாயம்) திருத்தம் செய்தல்

அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாக தற்போது காணப்படும் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை, நீதி அமைச்சர் நியமித்துள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள் தொடர்பான குழு பரிந்துரைத்துள்ளதுடன், வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பும் போது மின்னஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி செய்தி போன்றவாறான சமகாலத்தில் அதிகமாகப் பயன்படுத்தும் தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்துவதன் தேவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த குழு பரிந்துரைத்துள்ள திருத்தங்களை உள்வாங்கி குடியியல் வழக்குக் கோவை (101 ஆவது அத்தியாயம்) திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரல்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாத நிகழ்ச்சி நிரல் கீழ்வரும் வகையில் நடாத்துவதற்கு பிரதமர் சமர்ப்பித்த ஒழுங்குபடுத்தல் விடயங்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளது.

2021 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்த பின்னர், வரவு செலவு விவாதம் ஆரம்பிக்கப்பட்டு 2021 நவம்பர் 22 ஆம் திகதி வரை விவாதத்தை நடாத்துதல்
வரவு செலவுத் திட்டம் தொடர்பான செயற்குழு விவாதம் 2021 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2021 திசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடாத்துதல்
வரவு செலவுத் திட்டம் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பை 2021 திசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு நடாத்துதல்

5. இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கும், அடையாளங் காண்பதற்கும் பொருத்தமான பொறிமுறையைச் சமர்ப்பித்தல்

இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக அடையாளங் காண்பதற்கான குறிகாட்டிகள் அல்லது பொறிமுறைகள் இன்மையால் மேலெழுந்துள்ள பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, இலங்கையின் கலாச்சார தனித்துவங்களை உறுதிப்படுத்தும் தொட்டுணரக்கூடிய (Tangible), தொட்டுணர முடியாத (Intangible) தேசிய மரபுரிமைகளை அடையாளங் காண்பதற்கு பொதுமக்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்து பொறிமுறையொன்றை தயாரிப்பதற்காக குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்ஃகல்விமான்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக 2021 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதுடன், இலங்கையர்களிடமுள்ள தேசிய மரபுரிமைகளை அடையாளங் காணல், ஆவணப்படுத்தல், பிரகடனப்படுத்தல், பாதுகாத்தல், ஒழுங்குபடுத்தல், கையகப்படுத்தல், ஆராய்ச்சிகளை நடாத்துதல் போன்ற நடவடிக்கைகளை சரியான வகையில் முகாமைத்துவப்படுத்துவதற்காக மையப்படுத்தப்பட்ட சுயாதீன நிறுவனக் கட்டமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் தேவை அதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment