இலங்கையில் தலை தூக்கும் பண மோசடி சம்பவங்கள் : 44 நைஜீரியர்களை நாடு கடத்த திட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

இலங்கையில் தலை தூக்கும் பண மோசடி சம்பவங்கள் : 44 நைஜீரியர்களை நாடு கடத்த திட்டம்

இலங்கையில் பண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு உத்தரவு பிரப்பித்துள்ளார்.

‘நைஜீரியன் ஸ்கேம்’ எனும் பெயரால் பரவலாக அறியப்படும், நைஜீரியர்களால் முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்த சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான பண மோசடிகளுடன் தொடர்புடைய 44 பேர், வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் மிரிஹானை திறந்தவெளி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கத்தின் செலவில் விமானம் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அரசின் செலவில் இந்த நைஜீரியர்களை நாடு கடத்த சுமார் 41 இலட்சம் ரூபா வரை செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அந்த தொகையில் 80 வீதத்தை பொலிஸ்மா அதிபர் நிதியத்திலிருந்து வழங்க பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன இணக்கம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரை நைஜீரியர்களின் நிதி மோசடி தொடர்பில் 44 சந்தேக நபர்கள் கைதாகி தடுப்பு முகாமில் உள்ள போதும் அவர்களில் 24 பேருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக அறிய முடிகிறது.

எனவே அந்த 24 பேர் தொடர்பிலும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, நாடு கடத்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

நைஜீரியர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளில், அவர்களை அழைத்து செல்ல விமான சேவைகள் பின் வாங்கும் நிலையில், சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் அழைத்து செல்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவசியம் ஏற்படுமாயின் இலங்கை விமானப்படையும் விமான வசதியை வழங்க முன் வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த நான்கு மாதங்களில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் 170 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பண மோசடிக்கு உள்ளானவர்களில் வைத்தியர்கள் உள்ளிட்ட சமூகத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் பலர் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் 94 நைஜீரியர்கள் தங்கியுள்ள நிலையில், தங்களை பிரித்தானிய பிரஜைகளாக காட்டிக்கொண்டு பல்வேறு உத்திகளைக் கையாண்டு பண மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் பிடியில், பலரும் சிக்கியுள்ளதுடன் இது தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளதால் நாடு கடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment