மேலும் 400,000 Pfizer கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைதுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலவச COVAX தடுப்பூசி பகிர்தல் திட்டத்திற்கமைய, அமெரிக்க அரசாங்கத்தினால் குறித்த தடுப்பூசி டோஸ்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் (01) குறித்த தடுப்பூசி டோஸ்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-652 எனும் விமானம் மூலம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் விமான நிலையத்திலிருந்து, மாலைதீவின் ஊடாக, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
நேற்றையதினம் (30) 408,650 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்திருந்ததற்கு அமைய, கடந்த 2 நாட்களில் 808,650 Pfizer தடுப்பூசிகள் கிடைத்துள்ளது.
அதற்கமைய, இதுவரை அமெரிக்காவினால் சுமார் 2.4 மில்லியன் டோஸ் Pfizer தடுப்பூசி டோஸ்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தவிர கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அமெரிக்காவினால் சுகாதார அமைச்சுக்கு 17.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருத்துவ உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக, தூதரகம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி தேவையுள்ள நாடுகளுக்கு, 1.1 பில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்களை அமெரிக்க அரசாங்கம் இலவசமாக வழங்கவுள்ளதாக, அண்மையில் இடம்பெற்ற ஐ.நா. அமர்வில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்ததாக தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment