ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடிவேல் சுரேஷுக்கும் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடிவேல் சுரேஷுக்கும் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்திற்குள் கதவை உடைத்துக் கொண்டு உட்புகுந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக சங்கத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் சபைக்கு முன்வைத்த சிறப்புரிமை கூற்றால் முன்னாள் பிரதமரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடிவேல் சுரேஷுக்கும் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்ற நேற்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சிறப்புரிமை கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில், கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்திற்குள் கடந்த 8 ஆம் திகதி பலாத்கரமாக உட்புகந்த முன்னாள் எம்.பிக்களான சாகல ரத்னாயக்க, நவீன் திஸாநாயக்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் தலைமையிலான குழு சங்கத்தின் காரியாலயத்தில் அடாவடியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய அதிகாரிகளும் இந்தக் குழுவில் இருந்தனர். இவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளை வைத்திருந்தனர். இவர்கள் அலுவலகத்தின் காரியலத்தின் கதவை உடைத்தே உட்புகுந்தனர்.

பாராளுமன்றத்தில் அங்கத்துவம் இல்லாத அவர்கள் அமைச்சருக்குரிய பாதுகாப்புடன் சங்கத்தின் அலுவலகத்தில் உட்புகுந்தமை குறித்து சபாநாயகர் அவதானம் செலுத்த வேண்டும். இவர்களால் உயிர் அச்சுறுத்தலும் எனக்கு விடுக்கப்பட்டுள்ளது.

வெலிகடை பொலிஸில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடொன்றை நான் பதிவு செய்துள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு இந்த விடயத்தை அனுப்பி முறையான விசாரணைகள் நடாத்தி தீர்வை பெற்றுத் தருமாறும் கூறினார்.

இதன்போது சபையில் இருந்த எழுந்த, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்பில் வழக்கொன்று நீதிமன்றில் உள்ளது. முன்னாள் எம்.பி யோகராஜனை இந்த சங்கத்தின் தலைவராக நியமித்திருந்த தருணத்தில் நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் இது குறித்த தீர்ப்பு வெளியாகவுள்ளது. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை எடுத்துக் கொள்ளுமாறு கோருகிறேன் என்றார்.

இதன்போது எழுந்த வடிவேல் சுரேஸ், ஒளிவாங்கி முடக்கப்பட்டுள்ள நிலையில், ஆவேசத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததுடன் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுள்ளது. தோட்டப்புற மக்களை ஏமாற்ற வேண்டாமென ரணில் விக்கிரமசிங்கவுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இதன்போது கோபமடைந்த ரணில் விக்கிரமசிங்க, இந்த பைத்தியகாரனை அமரச் சொல்லுங்கள் என்றார்.

மீண்டும் வடிவேல் சுரேஷ், நான் சிறுபான்மை இன பிரதிநிதி, தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளேன். எமது கௌரவத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாமென ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரினார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, நீதிமன்றில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது சிறப்புரிமைகளுக்கு எதிரானது எனக் கூறியதுடன், இங்கு பாதுகாப்பு அல்ல, நிதி தொடர்பிலான பிரச்சினையே உள்ளது என்றார்.

இதன்போது எழுந்த ஹரின் பெர்ணான்டோ, நான் இந்த சங்கத்தின் தலைவராக உள்ளேன். வடிவேல் சுரேஷ் சிறப்புரிமை கேள்வியையே எழுப்பியுள்ளார். வேறு எதனையும் அவர் கூறவில்லை. முன்னாள் எம்.பிக்கள் சிலர் அமைச்சுக்கு உரிய பாதுகாப்புகளை பயன்படுத்தி அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்ததாகவே கூறியுள்ளார். இங்குள்ள நிதியோ அல்லது வேறு எதுவுவோ காணாமால் போனால் அதற்கு நாங்களே பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதையே வடிவேல் சுரேஷ் கூறுகிறார். 100 மில்லியனுக்கும் அதிகமான நிதி அதில் உள்ளது. நாம் திருடர்கள் இல்லை. அந்த நிதியில் கை வைக்க மாட்டோம். அது தோட்டத் தொழிலாளர்களின் நிதியாகும். வெலிக்கடை பொலிஸில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே வடிவேல் சுரேஸ் இங்கு கூறியுள்ளார் என்றார்.

மீண்டும் எழுந்த ரணில் விக்கிரமசிங்க, நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதா என அறிந்துகொள்ளுமாறே நான் தெரிவிக்கின்றேன் என்றார்.

இதன்போது குறித்த விடயம் குறித்து அவதானம் செலுத்துவதாக கூறி சபாநாயகர் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

No comments:

Post a Comment