இந்தியன் கபடி லீக் ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் இலங்கையர் அன்வர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

இந்தியன் கபடி லீக் ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் இலங்கையர் அன்வர்

12 அணிகள் பங்குபற்றும் இந்திய இந்தியன் ப்ரோ கபடி பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உலகின் முன்னணி கபடி லீக் தொடரான இந்தியன் ப்ரோ கபடி பிரீமியர் லீக்கின் வீரர்கள் ஏலத்தில் முதல் முறையாக இலங்கையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பருவத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 25 வயதான அன்வர் சஹீப் பாபா, தமிழ் தலைவாஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

8ஆவது இந்தியன் ப்ரோ கபடி பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த (30) மும்பையில் இடம்பெற்றது.

இம்முறை ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த அன்வர் சஹீப், லஹிரு குருப்பு, ஆசிரி சந்தருவன் மற்றும் அஸ்லம் சஜா ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர்.

வீரர்களுக்கான முதல்கட்ட ஏலத்தில் இலங்கை வீரர் அன்வர் சஹீட் பாபாவை தமிழ் தலைவாஸ் அணி 10 இலட்சம் (இலங்கை பணப்பெறுமதி 27 இலட்சம்) ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியன் ப்ரோ கபடி பிரீமியர் லீக் வரலாற்றில் வீரர்களுக்கான ஏலத்தின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.

எம்பிலிபிட்டிய ஜனாதிபதி வித்தியாலயத்தின் பழைய மாணவரான அன்வர் சஹீட், தற்போது இலங்கை கடற்படை கபடி அணிக்காக விளையாடி வருகின்றார்.

முன்னதாக இந்தியன் ப்ரோ கபடி லீக்கில் இலங்கையிலிருந்து இதுவரை இரண்டு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

ஐ.பி.எல் போட்டிகளைப் போல 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆரம்பமாகிய இந்தியன் ப்ரோ கபடி பிரீமியர் லீக் தொடரில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் பெங்களூர் புள்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவ்வாறான போட்டித் தொடரில் பங்குபற்றிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

2014 முதல் 2018 வரை தொடர்ந்து 5 வருடங்கள் பெங்களூர் புள்ஸ் அணிக்காக விளையாடிய சினோதரனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசியாக 2019இல் நடைபெற்ற தொடரில் விளையாட முடியாமல் போனது.

இலங்கை சார்பாக இம்முறை ஏலத்தில் இடம்பெற்ற ஏனைய மூன்று வீரர்களுக்கும் இரண்டாம் கட்ட ஏலத்தில் மீண்டும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment