கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வதில் பல்வேறு அசௌகரியங்கள் : நிலைமையை சுட்டிக்காட்டி மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மாநகர சபை முதல்வருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வதில் பல்வேறு அசௌகரியங்கள் : நிலைமையை சுட்டிக்காட்டி மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மாநகர சபை முதல்வருக்கு கடிதம்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே மாவட்டத்தில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சனி மட்டு மாநகர சபை முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சனி கடந்த முதலாம் திகதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மரணங்கள் சம்பவித்துள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்த 202 மரணங்களில் 27 உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.

இச்சடலங்கள் தகனம் செய்வதற்கு மட்டக்களப்பில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னியல் தகனசாலைக்கு தகனம் செய்ய கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

அதேவேளை இவ்விடயம் தொடர்பாக பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் முன் அனுமதி பெற வேண்டியதுடன் மின்னியல் தகனம் மேற்கொள்வதற்காக திம்புலாகலை பிரதேச சபையிடமிருந்து அனுமதியைப் பெற்று அதன் பின்னரே குறித்த உடலத்தை தகனம் செய்ய அனுப்ப வேண்டியுள்ளது.

தகனம் செய்வதற்கு சடலம் ஒன்றை அனுப்புவதற்கு சடலத்தை ஏற்றிச் செல்வதற்கு ஒரு வாகனம் அச்சடலத்தினை இறக்கி உரிய தகனசாலைக்கு கொண்டு சென்று கொடுப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிறிதொரு வாகனம் அத்துடன் இரு சாரதிகள் மற்றும் 6 உதவியாளர்கள் என ஆளணிகளும் ஒழுங்கு செய்ய வேண்டியுள்ளது.

தற்போது காணப்படும் இந்த தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையின் ஊழியர்கள் வரவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உரிய நேரத்துக்கு உரிய உடல்களை தகனம் செய்வதற்காக அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் பிரேத அறையிலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது.

எனவே நிலைமையை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுவதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment