சட்டங்களை மீறுவோர் மீது அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க பதுளை மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

சட்டங்களை மீறுவோர் மீது அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க பதுளை மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

இரா.சுரேஸ்குமார் 

பதுளை மாவட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு குழு இன்று (01) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூடியது.

பதுளை மாவட்ட மக்களுக்கு கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் தற்போதைய பிரச்சினைகள் பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது. 

பதுளை மாவட்டம் எங்கும் இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம், மேலும் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் மத்திய நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் கடந்த நாட்களில் அதிகரித்த பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினையான சூழ்நிலைகளைத் தடுக்க அனைத்து துறைகளின் பங்களிப்பின் கீழ் கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் கொவிட் நோயாளிகளின் அதிகரிப்பு இருந்தால், சிகிச்சை வழங்கப்படும் நிலையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் கொவிட் தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தப்பட்ட சட்ட மீறல்களுக்கு எதிராக செயல்படவும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், எதிர்வரும் நாட்களில் சாலைத் தடுப்புகளில் ஆன்டிஜென் சோதனைகளை நடத்தவும், சமூகத்தில் இருக்கக் கூடிய தொற்று நோய்களைக் கண்டறிந்து சுகாதாரத் துறையுடன் நடவடிக்கை எடுக்கவும் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது.

இந்தக் குழு கூட்டத்திற்கு, பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தேனிப்பிட்டிய, கிராமப்புற மற்றும் பள்ளி விளையாட்டு உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகம, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார், பதுளை மேயர் பிரியந்த அமரசிறி, , ஊவா தலைமை செயலாளர் பி.பி. விஜேரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம, ஊவா மாகாணசபை செயலாளர் மங்கள விஜேநாயக்க, ,ஊவா மாகாண சுகாதார செயலாளர் தயானந்த ரத்நாயக்க, பிராந்திய செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் இந்த மாவட்ட covid-19 ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மாகாண ஆளுநர் முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment