(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்படும் நோயளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக களுபோவில போதனா வைத்தியாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 37 இலட்சம் பெறுமதியான வென்டிலேட்டர் இயந்திரமொன்றை வழங்குவதற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் குழாம் தீர்மானித்துள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாக அண்மையில் நடைபெற்று முடிந்த இன்விடேஷனல் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகனுக்குரிய பணப்பரிசாக கிடைத்த 2 இலட்சம் ரூபா பணத் தொகையை களுபோவில வைத்திசாலைக்கு நன்கொடையாக தசுன் ஷானக்க வழங்கியிருந்தார்.
"இந்த வேலைத்திட்டத்துக்காக நாம் இதுவரையில் 10 இலட்சம் ரூபா வரையில் நிதி திரட்டியுள்ளோம். இதற்காக, இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ண, முன்னாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் உள்ளிட்ட தேசிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர். அவர்களின் பங்களிப்புடன் 20 இலட்சம் ரூபா நிதியை திரட்ட முடியுமென எதிர்பார்த்துள்ளேன்" என தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.
"இந்தத் திட்டத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமல்லாது நன்கொடை வழங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்களது உதவியுடன் எஞ்சிய 17 இலட்சம் ரூபாவையும் திரட்ட முடியும் என நம்புகிறேன். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு அமைவாக, கூடிய விரைவில் இந்த வென்டிலேட்டர் இயந்திரத்தை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்" என்றார்.
No comments:
Post a Comment