இறால் வளர்ப்பினை சீவனோபாயமாகக் கொள்ளும் புத்தளம் மாவட்டத்தின் சிலாப நகரின் குசலை எனும் ஊரிற்கு ஒரு களவிஜயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

இறால் வளர்ப்பினை சீவனோபாயமாகக் கொள்ளும் புத்தளம் மாவட்டத்தின் சிலாப நகரின் குசலை எனும் ஊரிற்கு ஒரு களவிஜயம்

இறால் வளர்ப்பினை சீவனோபாயமாகக் கொண்ட பண்ணை வளர்ப்பாளர்களின் துன்பத்துயரங்கள் ஒன்றல்ல. பல துயரங்களின் மத்தியில் அறுவடையை பெற்றுக் கொள்ளப் போராடும் இப்பண்ணையாளர்களுக்கு உரிய சலுகைகள் சரிவர கிடைக்கின்றனவா? என்பதை சற்று அலசி ஆராய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

உள்ளூர் உற்பத்திகளில் மாமிச சந்தைக்கு அதிக கிராக்கி உண்டு உன்பதை யாவரும் அறிந்ததே. அவ்வாறான இறால் வளர்ப்பில் போதிய முன்னேற்றம் காணாத இவ்வூர் பண்ணையாளர்கள் இப்பண்ணை வளர்ப்பினை புறந்தள்ளும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். பண்னை வளர்ப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய தடைகள் எழுந்துள்ளன.

பண்ணை வளர்ப்பில் முதலில் பண்ணை சுத்திகரிக்கப்படும். பண்ணையில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு ஆற்று நீரின் மூலம் பண்ணை நிரப்பப்படும். பின் NECTA எனும் நிறுவனத்தின் pc report இன் மூலம் இறால் குஞ்சுகள் தரமானவை என நிரூபிக்கப்பட்டு பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும். பொதுவாக 3 அல்லது 4 மாதங்களில் இறாலின் நிறை சந்தைக்கு ஏற்ற எடையைக் கொண்டுள்ள போது அறுவடை மேற்கொள்ளப்படும்.

கொரோனா காலத்தில் பண்ணை வளர்ப்பை மேற்கொள்ள அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளையில் பண்ணை வேலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. இறாலினை கொள்வனவு செய்யவும் அதற்கான உணவினை பெற்றுக் கொள்ளவும் முடியாத தட்டுப்பாடு நிலவியுள்ளது. “நெக்டா” போன்ற இறால் உற்பத்தி நிறுவனத்திடம் இறாலினை கொள்வனவு செய்ய முடியாத ஒரு தட்டுப்பாடும் நிலவியூள்ளது.

அதனை விட பாரியதொரு முதலீடும் பண்ணை வளர்ப்பிற்கு தேவை. தற்போதைய சூழலில் வங்கிக் கடன்களை உடனடியாக பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் வட்டிக்கு கடன் வாங்கி அம்முதலைக்கொண்டு பண்ணைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய முதலீட்டின் பற்றாக்குறையின் காரணத்தாலும் நுண்ணங்கித் தொற்றின் காரணத்தாலும் இறால்கள் இறந்து மடிகின்றன. இதனால் வட்டிக்கு கடன் பெற்றவர்களின் நிலை தான் என்ன? என்பதை பண்ணை வளர்ப்பாளர் ஒருவர் கூறிய போது 

“கடன் பெற்ற முதலீட்டைக் கொண்டு பண்ணைக்கான வேலைகளை ஆரம்பித்தேன். இறால் உணவு மின்சாரக்கட்டணம் ஏனைய செலவுகளுக்குமே அப்பணம் கட்டுப்படியானது. மீண்டும் உடனடிக் கடனைப் பெற அதிக வட்டிக்கு கடனைப் பெற வேண்டியுள்ளது. பண்ணைச் செலவு வட்டிக்குமே ஒரு தொகை முதலாக வர கடனை அடைக்கிறதா வட்டியைக் கட்டுவதா எனத் தெரியாமல் போனது. கடைசியில் இறாலுக்கு நோயத்தொற்று ஏற்பட்டது. கடன் கடன் கடன்……. என்ன செய்வன் கடன்காரன் வீட்டிற்கு வருவான். சண்டை போடுறான். இவனும் எவ்வளவு காலம் பொறுப்பான். வீட்டு பத்திரத்தை அடகு வைக்கச் சொன்னான்.” எனக் கூறினார். கொரோனா காலத்தில் இறாலிற்கான விலையும் குறைந்துள்ளது.

திரு. செல்வநாயகத்தின் கருத்துப்படி “நாம் கொரோனா காலத்தில் அறுவடை செய்த இறால்களை சந்தைப்படுத்தல் கடினமாக உள்ளது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி இல்லாத காரணத்தினால் இறாலிற்கான சந்தை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இழப்பீடுகளும் அதிகம். எனவே சந்தையில் இறாலின் விலை அதிகரிக்கப்படல் வேண்டும்” எனக் கூறினார்.

சொந்தமாய் இறால் பண்ணை இல்லாதவர்கள் குத்தகைக்கு பண்ணையை வாங்குகின்றனர். அறுவடை முடிவில் பெறும் இலாபத்தை குத்தகைக்கும் இதர செலவூகளுக்கும் கொடுத்து வெரும் கையூடன் திரும்புகின்றான் வீடு நோக்கி…. கடன்கள் கழுத்தை நெருக்கும் போது வெளிநாடு சென்று உழைக்கும் வழமையாகியுள்ளது.

அத்தோடு இறால் வளர்ப்பினை செவ்வனே மேற்கொள்ள அதற்கான வளங்களும் சரியாக செப்பனிடல் வேண்டும். அதாவது பண்ணையை அண்டிய ஆற்றுப்பள்ளத்தாக்குகளிலே அதிக கழிவுப் பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றை முறையாக அகற்றி ஆற்று நீரின் மட்டத்தை உயர்த்த வேண்டியுள்ளது. ஆற்றில் அதிக களிமண் என்பதால் நிலத்தடி நீர் மேலெழுவதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றன. இதனால் நீரின் மாசடைதல் காரணமாக இறாலிற்கு ஏற்ற நீரின் PH பெறுமானம் கொண்ட தூய நீரைப் பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பண்ணையின் வடிகால்கள் வழியே தேங்கியிருக்கும் கழிவூ நீரை முறையாக வெளியேற்ற சிறந்த வடிகாலமைப்பும் இல்லை. இதனால் மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் முகங் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை அரசாங்கத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

செல்வந்தர்கள் கூலிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி பண்ணை வேலைகளை கண்காணிக்கின்றனர். அவர்களது உழைப்பில் திண்டாடும் கயவர்கள் சம்பளத்திலும் தட்டக்கழிக்க தவறவில்லை.

பண்ணைக்குத் தேவையான pedalwheel, மின்சாரம், மின் மோட்டார்கள் என்பவற்றை சிறிய தவனைக் கொடுப்பனவிற்கேனும் கொள்வனவு செய்து கொடுக்கும் திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்ய வேண்டும். இல்லையேல் அவற்றையும் குத்தகைக்கு வாங்குவதும் பழுதுகள் ஏற்படும் தருணத்தில் இரண்டு மடங்கு கொடுப்பணவினைக் கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

இவ் நெருக்கடியான காலத்திலும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நடவக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பண்ணையாளர்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுத்து தரமான இறாலிற்கான உற்பத்தியை ஏற்படுத்தி சந்தையில் இறாலிற்கான கேள்வியை அதிகரிக்கும் கடமை அரசாங்கத்தை சார்ந்ததே.

எனவே நாம் பொருளாதார ரீதியாக முன்னேற பணம் ஒரு ஊடகம். பண்ணையாளர்கள் பணத்தை பெறுவதற்கான மாற்றுவழிகளை வங்கிகள் அறிமுகப்படுத்த வேண்டும். குறைந்த வட்டியில் உடனடிப் பணத்தை வழங்கும் திட்டங்களை வங்கிகள் அமுல்படுத்த வேண்டும். நம்மவர் மத்தியில் முயற்சியுடையவர்களை ஊக்குவிப்பதன் மூலம் தன்னிறைவுப் பொருளாதாரம் முன்னேறும்.

இதற்கான ஒரு தடையாக போதுமான பணத்தொகை மக்களுக்கு இல்லாமையே ஆகும். பண்ணைவளர்ப்பாளர்கள் அல்லலுறும் நிலையை மனப்பதிவுகளுடன் திரும்பினேன் வீடு நோக்கி மக்களுக்கு சுய தேவை பொருளாதாரம் தொடர்பாக சரியான வழிகாட்டல்கள் கொண்டு சேர்க்கப்பட்டால் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இடப்படும் தொடர்புள்ளிகள் முற்றுப்புள்ளிகளாகும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

செ. ரமேஸ் மதுசங்க
நான்காம் வருடம்
ஊடகக்கற்கைகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment