(நா.தனுஜா)
வருடாந்தம் அரச திறைசேரிக்கு சுமார் 2 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுக் கொடுத்த கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக நட்டமடைந்து வந்த அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டியதன் அவசியம் என்னவென்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறக் கூடும் என்பதனாலேயே இரட்டைப் பிரஜாவுரிமையுடைவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்த வேண்டாம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, வருடாந்தம் 2 பில்லியன் ரூபா இலாபமீட்டுகின்ற கட்டமைப்பின் பங்குகள் விற்பனை செய்யப்படுவதிலிருந்து அரசாங்கம் முகங்கொடுத்திருக்கும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி நன்கு வெளிப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்திருக்கின்றது.
இந்த மதிப்பீடுகளின் முடிவில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுமானால், எமது நாட்டின் பொருளாதாரம் மிகப்பாரிய நெருக்கடியைச் சந்திக்கநேரிடும்.
அதேபோன்று கறுப்புப் பணத்தை சட்டபூர்வ பணமாக மாற்றுகின்ற நிதித் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன.
நாடொன்றில் ஸ்திரமான அரசாங்கமும் உறுதிப்பாடான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் போக்கு என்பவையே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான கருவிகளாகும்.
எனினும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment