மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஐந்தாவது சரத்திற்கிணங்க மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடையாது என எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கூற்றுக்கள் மக்களை திசை திருப்புவதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெரும் எண்ணிக்கையில் பதுக்கி வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் என்பன நுகர்வோருக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துவதால் வர்த்தகர்களின் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதியினால் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது மற்றும் இணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலை அல்லது இறக்குமதி விலையை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு சாதாரண விலையில் விநியோகிப்பதற்காக அதிகாரிகளை வழி நடத்துவதற்கும் மொத்த இறக்குமதிக்காக அரச வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள கடன்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து அறவிடுவதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பான அவசர கால ஒழுங்கு விதிகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment