பொது வெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் : கூட்டமைப்பு உறுப்பினர்களிடத்தில் இரா. சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

பொது வெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் : கூட்டமைப்பு உறுப்பினர்களிடத்தில் இரா. சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொது வெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் கருத்து வெளியிடும் உரித்துண்டு. அதனை கட்டுப்படுத்தவும் முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா நெருக்கடியால் ஒன்றுகூடிக் கலந்துரையாட முடியாத நிலைமைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களில் பரஸ்பர கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. பகிரங்கமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்ட சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரே கொள்கையில் ஒரே இலக்கு நோக்கி பயணிக்கின்ற அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற விடயத்தில் எமக்குள் எவ்விதமான மாறுபட்ட நிலைப்பாடுகளும் கிடையாது. இதற்காகவே அனைவரும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அவ்விதமானதொரு சூழலில் அண்மைய நாட்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொது வெளியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்ற அடிப்படையில் அனைவருக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு தாரளமான உரித்துள்ளது. அவ்விதமாக வெளிப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்காத வகையில் அமைய வேண்டும். அதுமட்டுமன்றி சாதாரண மக்களையும் குழப்புவதாக அமைந்து விடக்கூடாது.

ஆகவே இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புணர்ந்து கருமங்களை ஆற்ற வேண்டும். தற்போதைய சூழலில் கொரோனா நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கூட்டமைப்பாக ஒன்று கூடி கலந்துரையாட முடியாத நிலையில் இருக்கின்றோம்.

விசேடமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் நான் சந்திப்புக்களை தவிர்த்துள்ளேன். ஆகவேதான் பொது வெளியில் பேசப்படுகின்ற விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய கருமங்களை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டு வருகின்றன.

எனினும், இந்த விடயங்களுக்கு எல்லாம் அப்பால், கூட்டமைப்பாக நாம் எமது மக்களின் நீதிக் கோரிக்கை, பொறுப்புக் கூறல், நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கேசரி

No comments:

Post a Comment